அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மருந்து பொருள்களுக்கு 100%, பர்னிச்சருக்கு 30%, மற்றும் கனரக லாரிகளுக்கு 25% வரி விதிப்பதாக ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு நிறுவனம் அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலையை கட்டவில்லை என்றால், அதற்கு வரி விதிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றும், அமெரிக்காவில் மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால், அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்து பொருள்களுக்கு வரி இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்டோபர் முதலாம் திகதி முதல் சமையலறைப் பொருள்கள் முதல் கழிவறை குழாய்கள் வரை பல்வேறு பொருள்களுக்கு வரியை விதித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு, உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது ஒரு அழுத்தத்தை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில், அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு $3.6 பில்லியன் (ரூ. 31,626 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது
நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் $3.7 பில்லியன் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்த புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.








