மட்டக்களப்பு வாகநேரியில் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 18 லட்சத்து 17 ஆயிரம் மில்லிலிட்டர் கசிப்புடன், உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (27) நன்பகல் வேளையில் வாழைச்சேனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார வழிகாட்டலிலும், எஸ்.ஜே. அசங்க தலைமையிலான போதைத் தடுப்பு பிரிவினராலும் வாகநேரி கல்கனி காட்டுப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சுற்றிவளைப்பில் 11 பரல்களில் கசிப்பும், உற்பத்தி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இதற்கு முன்பும் வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவு கசிப்பு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












