ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் நிகழ்வு இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஜனாதிபதிக்கு மரியாதை அணிவகுப்புடன் சிறப்பு வரவேற்பு அளித்ததுடன், இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் இருதரப்பினருக்கிடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்துப் பேசப்பட்டது. பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் திட்டம் மற்றும் பாதுகாப்பு உதவி தொடர்பான ஒப்பந்த ஆவணங்கள் இதன்போது கையொப்பமிடப்பட்டன.
கூட்டு ஊடகச் சந்திப்பில் ஜப்பான் பிரதமர் இஷிபா, இந்தியப் பெருங்கடலில் முக்கிய இடமாக உள்ள இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை மிக அவசியம் எனவும், இருநாடுகளுக்கிடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி திசாநாயக்க உரையாற்றியபோது, இலங்கை-ஜப்பான் நட்பு பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தின் அடிப்படையில் நீண்டகாலமாக வலுவடைந்துள்ளது என்றும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித் திட்டங்களை மீளத் தொடங்க ஜப்பான் வழங்கிய உதவிக்கும், சர்வதேச நாணய நிதி மறுசீரமைப்பு திட்டத்தில் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
சந்திப்பு முடிவில் இருதரப்பினராலும் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.








