காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிவான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்தில் 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4,6%) இடம்பெயர்ந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் மொத்தம் 69 இலட்சம் சிறுவர்களின் இடம்பெயர்வுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் மிக உயர்ந்த சதவீத பாதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் சிறுவர் சனத்தொகையில் சுமார் 7.2% பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இலங்கையில், சராசரியாக ஒவ்வொரு அனர்த்தத்துக்கு சராசரியாக 965 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புயல்கள் பெரும்பாலான இடம்பெயர்வுக்கு காரணமாகியுள்ளதுடன், அவை 54% இடப்பெயர்வுக்கு காரணமாக இருந்துள்ளன.
அத்துடன் வெள்ளப்பெருக்கு 44% இடப்பெயர்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இலங்கையைத் தாக்கிய “ரோனு” (Roanu) சூறாவளி, கால் நூற்றாண்டுக்கும் மேலான மிக அதிக மழையைப் பொழிந்து. சுமார் 141,000 சிறுவர்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது.
யுனிசெஃப் சுட்டிக்காட்டியபடி, பெரும்பாலான இடப்பெயர்வுகளுக்கு முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றங்கள் முக்கிய காரணமாகும். இதன் மூலம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் முன்கூட்டிய வெளியேற்ற நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கைகள் இருப்பதால், இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.
இதேவேளை, தெற்காசியாவில் உள்ளவர்கள் காலநிலை மாற்ற அனர்த்தங்களால் இடம்பெயரும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இது சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மீறல்களை அதிகரிக்க வழிவகுக்கிறது.
சிறுவர்களின் பாதுகாப்பு, தயார்நிலை மற்றும் கொள்கைகளில் அவர்களைச் சேர்ப்பதை மேம்படுத்த அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தனியார் துறை ஆகியோருடன் இணைந்து செயல்படுமாறு யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.








