திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுபிட்டி பகுதியில், கடற்கரையை அண்மித்த தேவிக்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பரவு நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்களால் இன்று (05) சனிக்கிழமை, குறித்த பகுதியில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படாத நிலையில், குறித்த பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனத் தெரிவித்து துப்பரவு பணிகளை மேற்கொண்டு கட்டிடம் அமைக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வார இறுதி நாளான சனிக்கிழமை குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பரவு நடவடிக்கைக்கான அனுமதி, பணிகளின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







