ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பில் ஈரானிய அதிகாரிகளிடமிருந்தோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகத்திடமிருந்தோ இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா கடற்படை முற்றுகையை ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி கார்க் தீவு ஊடாக இடம்பெறும் நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கார்க் தீவைச் சுற்றியுள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மீது ஏற்படும் பாதிப்புகள் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய்த் தொழில்துறைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








