நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் ஒருங்கிணைப்புடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் இன்று (05) நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கட்டத்தில் 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படவுள்ளன. அவற்றின் செயற்பாடுகள் மற்றும் பெறுபேறுகளை மதிப்பீடு செய்த பின்னர், நாடு முழுவதும் சேவையில் ஈடுபடும் ஏனைய நெடுந்தூர பேருந்துகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த AI அமைப்பின் மூலம், பயணத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.
குறிப்பாக, சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது அதிக சோர்வு ஏற்படுதல், வாகனம் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக குரல் எச்சரிக்கை மூலம் சாரதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
மேலும், ஆசனப் பட்டை அணிய வேண்டிய சந்தர்ப்பங்களில் அதனை அணியாதிருப்பது போன்ற பாதுகாப்பு விதிமீறல்களையும் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகளை தண்டிப்பதை பிரதான நோக்கமாகக் கொள்ளாமல், விபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, AI அடிப்படையிலான பாதுகாப்பு கண்காணிப்பு முறையை நாடு முழுவதும் உள்ள நெடுந்தூர தனியார் பேருந்துகளில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.







