கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலது பக்க பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மற்றும் இடது உள் கரோடிட் தமனி (left internal carotid artery) அதாவது மூளைக்கு செல்லும் நரம்பு 80% சுருக்கமடைந்திருந்த 55 வயது நோயாளிக்கு, நரம்புகளின் சுருக்கங்களை நீக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது எவ்வித சிக்கல்களும் இன்றி இடது கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சையை இரத்தநாள சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் நதுன் தனது குழுவினருடன் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

இந்தநிலையில் நோயாளி எவ்வித இடர்களும் இன்றி குணமடைந்து, நரம்பியல் ரீதியாக எவ்வித பாதிப்புமின்றி, சத்திரசிகிச்சைக்குப் பின் மூன்றாவது நாளில் வீடு திரும்பியுள்ளார்.
“இந்த மைல்கல் வெறும் சாதனை மட்டுமல்ல, இது பிராந்தியத்திற்கான மேம்பட்ட வாஸ்குலர் அறுவை சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும் என குறித்த இரத்தநாள சத்திரசிகிச்சை நிபுணர் நதுன் கருத்து தெரிவித்தார்.








