பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்.
மேலும் போக்குவரத்து அமைச்சர் ஊடகங்களைப் பொறுப்புடன் செய்தி வெளியிட வலியுறுத்தினார்,
கம்பளை தொலுவ பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு செய்தித்தாளில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
“விபத்து குறித்து செய்தி வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த செய்தியில், பெண் ஓட்டுநர் பிரேக் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என அமைச்சர் செய்தித்தாள் கட்டுரையை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
“இது ஓட்டுநர் ஒரு பெண்ணாக இருந்ததால் நடந்ததல்ல. இது எந்த ஓட்டுநருக்கும் நடக்கலாம். பெண்களை இந்தத் துறையில் பணியமர்த்த முயற்சிக்கும் இந்த நேரத்தில், ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களை ‘ஓட்டுநர்’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும்.
‘பெண் ஓட்டுநர்’ அல்லது ‘ஆண் ஓட்டுநர்’ என்று பாலின வேறுபாடு குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.








