நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 2009 முதல் இலங்கை குறித்து 11 தீர்மானங்கள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்குக் காரணமாக அரசாங்கங்கள் பிரிவினை மற்றும் இனவாத அரசியலில் ஈடுபட்டு, உள்நாட்டு நல்லிணக்கத்தை உருவாக்கத் தவறியதாக அவர் விமர்சித்தார்.

மேலும், முன்னைய அரசாங்கங்கள் வாக்கெடுப்பில் தோல்வியடைவது தெரிந்திருந்தும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்து வாக்கெடுப்பு கோரியதாகவும், இதனால் பிரச்சினையை சர்வதேச ரீதியில் மேலும் சிக்கலாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டு முறைகள் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டு அலுவலகம், காணாமல் போனவர்கள் அலுவலகம் போன்றவற்றை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், “இலங்கை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, சர்வதேசமயமாக்கப்பட்ட பிரச்சினையை உள்நாட்டுத் தளத்திற்குக் கொண்டு வந்து தீர்ப்பதே நமது குறிக்கோள்” என வலியுறுத்தினார்.








