ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ,தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் தெரிவித்ததாக குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு battinaatham ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியது.
நேற்றைய தினம் (09) பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களை சந்தித்த போது, தாங்கள் ஊடகங்களில் கூறியதாக பரப்பப்படும் “குறிப்பிட்ட நபருக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை” என்ற தகவல் குறித்து வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தான் அவ்வாறான கருத்து ஒன்றையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், முன்பே தெரிவித்ததுபோல குறித்த நபருக்கும் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பாடுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக பாராளுமன்றத்திலும் தாம் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சில ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பும் இத்தகைய தவறான வதந்திகளை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மேலும் தெரிவித்தார்.








