கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டிடம் தனக்குச் சொந்தமானது என்று ஊடகங்களில்
செய்தி வெளியாகி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்டிடத்துக்கு மின்சாரம் பெறுவதற்கு “ஜி. ராஜபக்க்ஷ” என்ற பெயரில் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அந்த விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ கூறுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள ஒரு பதிவில்,
கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் வேறொருவரால் கட்டப்பட்ட கட்டிடம் என்னுடையது என்று தவறாகக் கூறும் ஒரு செய்தி அவ்வப்போது ஊடகங்களில் வெளியிடப்படுவதை அவதானிக்க முடிந்தது.

நேற்று (13) சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்திகளில் அந்தக் கட்டிடத்தைக் குறிப்பிடும்போது எனது பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டிடத்தின் உரிமை குறித்து கடந்த காலத்தில் சிஐடியினால் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை தொடர்பாக நானும் ஒரு வாக்குமூலம் அளித்தேன்.
அந்தக் கட்டிடத்துக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக “ஜி. ராஜபக்க்ஷ” என்ற நபரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டும் தொடர்பிலேயே என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை. கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில் படிக்க முடியாத ஓர் எழுத்து இருந்தது.
மெனிக் ஆற்றுக்கு அருகில் உள்ள கட்டிடம் என்னுடைய சொத்து அல்ல என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
கதிர்காமப் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்டவோ பராமரிக்கவோ எனக்கு எந்த காரணமோ விருப்பமோ இருந்ததில்லை என்பதையும் கூற வேண்டும்.








