Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் கப்பம் கோரும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) தகவல்களைத் திரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசடிக்காரர்கள் தங்களது இலக்குகளைத் தெரிவு செய்வதற்கு முன்னர், அவர்களின் சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களை சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
மோசடியின் ஆரம்ப கட்டமாக, Instagram ஊடாக அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட போலியான கணக்கிலிருந்து ‘Hi’ எனக் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் நபர்களை சில நாட்கள் கண்காணித்த பின்னர், மீண்டும் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குறித்த பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, பதிலுக்கு தங்களது புகைப்படங்களை அனுப்புமாறும் அல்லது WhatsApp வீடியோ அழைப்பின் மூலம் நிர்வாணக் காட்சிகளை வழங்குமாறும் பாதிக்கப்பட்டவர்களை மோசடிக்காரர்கள் தூண்டுகின்றனர்.
அவ்வாறு பெறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அவற்றை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தி பணம் மற்றும் கப்பம் கோரப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, அடையாளம் தெரியாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு SLCERT பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








