இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினரான சாமர சம்பத் சமர்ப்பித்த நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை அது பற்றி விசாரிக்கும் நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு சபாநாயகர் முடிவு செய்து இருக்கின்றார்.
அரசமைப்பு கவுன்ஸிலில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, அங்கு எப்போதும் அரசுத் தரப்பை ஆதரித்துச் செயற்படுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் சிறப்புரிமையை அவர் மீறியுள்ளார் என்று சாமர சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடயத்தை ஒட்டி சிறீதரனுக்கு எதிராகச் சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த சாமர சம்பத் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தாராயினும் அதில் சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழு விவரம் தெரிவிக்கப்படாத காரணத்தினால் அதனை நேற்று முன்தினம் (22) சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

சிறீதரனுக்கு எதிரான சிறப்பு உரிமை மீறல் விசாரணை தொடர்பான விடயங்களை திறந்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைத்து விவாதிப்பது அரசமைப்பு கவுன்ஸிலின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் பாதிக்கக் கூடும் என்பதாலும், நாடாளுமன்றத்தின் மரியாதையை குறைக்க கூடும் என்பதாலும் அது பற்றிய விடயங்களை சிறப்புரிமை மற்றும் நடத்தை நெறிமுறை தொடர்பாக விசாரிக்கும் குழுவில் முன்னால் தான் முன்வைக்க விரும்புகின்றார் என சாமர சம்பத் முதலில் தமது கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி சபாநாயகர் வலியுறுத்தியமையினால் அவற்றை சாமர சம்பத் இன்று எழுத்து மூலமாகச் சமர்ப்பித்தமையுடன் அது பற்றி சபையில் விவரித்தார். அதையடுத்து அந்தக் கோரிக்கையை ஏற்று, விடயத்தை சிறப்புரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு ஒப்படைக்கத் தான் முடிவு செய்தார் என சபாநாயகர் நேற்று (23) சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு உள்ளது. அவருக்கு எதிரான விசாரணை நிலுவையில் உள்ளது. அத்தகையவர் நீதியரசர்கள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அது போன்ற முக்கிய பதவிகளுக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் அரசமைப்புக் கவுன்லிலில் இடம்பெற்றிருப்பது முறையற்றது. இயற்கை நீதிக்கு முரணானது” – என்றார் சாமர சம்பத்.

அது மாத்திரமல்ல, பிரதான எதிர்க்கட்சி தவிர, தமது கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசமைப்பு கவுன்ஸிலில் இடம்பெற்றுள்ள சிறீதரன், அங்கு முக்கிய நியமனங்களில் எப்போதும் அரசுத் தரப்போடு சேர்ந்து வாக்களிப்பதன் மூலம் தமது கட்சி உட்பட்ட அந்த எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை மீறிச் செயற்படுகிறார் என்று சாரப்பட பல குற்றச்சாட்டுகளை சாமர சம்பத் தமது சமர்ப்பணத்தில் முன் வைத்துள்ளார்.
சிறீதரன் எனது மற்றும் எனது கட்சியின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பிரதான எதிர்க்கட்சிக்கு உட்படாத பிற எதிர்கட்சிகளின் உறுப்பினர்களின் நம்பிக்கையும் இழந்துள்ளார். அவரது நடத்தை அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினருக்கு தேவையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பாகுபாடின்றிச் செயல்படும் பண்புகளை பாதித்துள்ளது. எனவே, இது தெளிவாக சிறப்புரிமை மீறலாகவும் நடத்தை நெறிமுறை மீறலாகவும் அமைகின்றது. எனவே, இதனைச் சிறப்புரிமை மீறலாக அங்கீகரித்து, அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறுபான்மை எதிர்க்கட்சிகளுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அரசமைப்பு கவுன்ஸிலுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்” – என்றும் சாமர சம்பத் கூறியுள்ளார்.
அவரின் சமர்ப்பணத்தைப் பரிசீலித்த சபாநாயகர் அவரது குற்றச்சாட்டை நாடாளுமன்ற சிறப்புரிமை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் தீர்மானித்து அது பற்றி சபையில் அறிவித்தார்.








