ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸார் துரத்திய வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலியந்தலை – மொரட்டுவ வழியாகச் சென்ற வேன், பொலிஸ் சமிக்ஞையை மீறி சென்றதால் அதிகாரிகள் அதை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர். ரத்மலானை பெலெக்கடை பகுதியில் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதும், வாகனம் நிறுத்தப்படவில்லை.

பின்னர், ரயில் நிலையம் முன் சாரதி வாகனத்தை நிறுத்தி தப்ப முயன்றபோது விழுந்து காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வாகன சாரதி என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், யாழ்ப்பாணம் (25) கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பொலிஸாரை மோதி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் 18 வயது இளைஞன் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.









