மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில், விசேட வாகன பரிசோதனை செயல் திட்டம் நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பிரதான வீதிகள் வழியாக பயணித்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. போக்குவரத்து விதிகளுக்கு இணங்க இயங்காத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வாகனங்களின் பிரேக்குகள், டயர்கள், சிக்னல் விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.
பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, குறைகளை திருத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை பின்பற்ற தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய பரிசோதனையின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையில் மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி, மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டனர்.












