வாழைச்சேனை கிழக்குப் பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த நூறு மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் நிதி கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (30) காலை நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறு மூலை வளாக நல்லையா மண்டபத்தில் துணை வேந்தர் பேராசிரியர் பீ. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூறு மாணவர்களுக்கு மாதம் தலா ஏழாயிரத்து ஐந்நூறு ரூபா வீதம் வழங்குவதற்கென இவ்வருடம் ஒன்பது மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கல்வி பூர்த்தியடையும் வரை இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் பல்கலைக்கழக மாணவர்களுடன் சினேகபூர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.











