பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பனாப்பிட்டிய நேற்று (29) நேரடி விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் தற்போதைய நிலையையும், அத்தியாவசிய தேவைகளையும் ஆய்வு செய்த அவர், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பி. கார்த்திகேயனிடமிருந்து குறைபாடுகள் குறித்து விரிவான விளக்கத்தையும் பெற்றார்.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறை, தாதியர் விடுதி வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிலையில், பொத்துவில் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் (Surgeon) மற்றும் பொது வைத்திய நிபுணர் (VP) ஆகியோரை விரைவில் பணிக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.
மேலும், வைத்தியசாலை அபிவிருத்திக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அபிவிருத்திக் குழுவின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
இந்த விஜயத்தில் வைத்தியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








