வடக்கில் கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் பெரும் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதனைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தது. அதன் பின்னணியில், பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குக் கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த அரச தரப்பு எம்.பி ஒருவர், வெற்றிடங்களை நிரப்பும் போது, தனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தன்னுடைய அனுமதியுடனுமே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு உதவி செய்யுமாறு தாம் கோரிக்கைகளை முன்வைத்த போது பாராமுகாமாக இருந்து விட்டு, அனுமதி கிடைத்ததும் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கும் இந்தத் செயல் ஊழியர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது எனவும், முன்னைய ஆட்சிக் காலங்களைப் போலவே தனது உறவினர்களையும், நண்பர்களையும் ஆள்சேர்ப்பில் உள்நுழைக்க முயற்சிக்கும் இந்த எம்.பியின் செயல் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை இழக்க வைக்கின்றது எனவும் குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








