முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கட்சியினர் காலத்திற்கு காலம் ஒவ்வொரு விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை காரியாலயம் தொடர்பில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய அந்த காரியாலயத்தில் நல்ல பண்பினை கற்றுத் தருகிறார்கள். ஒழுக்கமுள்ள அரசியலை கற்றுத் தருகிறார்கள். ஒற்றுமையை எவ்வாறு மக்களிடத்தில் வளர்த்து எடுப்பது என கற்றுத் தருகின்றார்கள். கண்ணியமாக எமது மக்களோடு எவ்வாறு அரசியல் செய்வது என்பதை கற்றுத் தருகிறார்கள். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நாட்டினை இன, மத, ஓற்றுமையுடன் கட்டி ஏழுப்புவது எவ்வாறு? பொருளாதார பின்னடைவில் இருந்து நாட்டை கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்வது எவ்வாறு என்று கலந்துரையாடுகின்றோம்.
உங்கள் கட்சி அலுவலகங்களில் கடந்த காலத்தில் என்ன நடந்தது என சிந்தித்து பாருங்கள். குண்டர்களை எவ்வாறு தயார்படுத்துவது. அந்த குண்டர்களை எவ்வாறு வன்செயல்களில் ஈடுபட வைப்பது, மத்திய வங்கியில் கொள்ளையடித்த பணத்தை எவ்வாறு பங்கு போட்டு பிரித்துக் கொள்வது, இனவாதமான அரசியலை எவ்வாறு மேற்கொள்வது இவ்வாறான செயற்பாடுகளுக்கே பயன்படுத்தியுள்ளீர்கள்.
இதன்மூலம் கட்சி காரியாலயம் ஊடாக இந்த நாட்டை சுரண்டி மக்களை குட்டி சுவராக்கினீர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
பாராளுமன்ற செலவீனங்கள் சரியான முறையில் மக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்தப்பட வேண்டும் இந்த பண ஓதுக்கீடு மக்கள் வரிப்பணத்தில் என்று கருதப்பட வேண்டும். ஆனால் எதிர்கட்சியினர் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். தேவையற்ற விடயங்களை கதைப்பதற்கும் தமது சொந்த விடயங்களை கதைப்பதற்கும் சமூக ஊடகங்களில் பிரபல்யம் தேடவும் பயன்படுத்துகிறார்கள் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் செலவீனங்களை நாங்கள் அதாவது எமது தோழர் அநுரகுமார திஸாநாயக்க குறைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 124 மில்லியன் ரூபாய் செலவழித்துள்ளார். அதே மாதிரி 2025 ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை தோழர் அநுரகுமார திஸாநாயக்க 79.9 மில்லியன் ரூபாய் செலவழித்து உள்ளார். இங்கு 44.1 மில்லியன் ரூபாய் மீதம் படுத்தப்பட்டு மக்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு வரும் போது இரண்டு உலங்கு வானூர்திகளில் வருவார். அவர் வடக்கில் பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் கொழும்பில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. மக்கள் பணம் வீண்விரயம் செய்யப்பட்டது. ஆனால் எமது ஜனாதிபதி இலங்கையின் எந்தப்பாகம் சென்றாலும் இரண்டு வாகனங்களுடன் சென்று மக்கள் பணம் வீண் விரயம் செய்வதை குறைத்துள்ளார்.

வெளிநாட்டு பயணங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதிமார் அதிக செலவீனங்களை செய்துள்ளனர்.
2010-2014 வரை மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி அவர்கள் 3572 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். 2017 -2019 வரை மைத்திரிபால சிறிசேன அவர்கள் 384 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார். 2020-2022 வரை கோட்டபாய ராஜபக்ச அவர்கள் 126 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். ஆனால் 2024-2025 பெப்ரவரி வரை எங்களுடைய ஜனாதிபதி வெறுமனே 1.8 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். இதை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக தெரிகிறது.
இதற்கு மேலாக மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 2013 ஆம் ஆண்டு 1144 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்துள்ளார்.
இது யாருடைய பணம். இது தான் இந்த நிலைக்கு காரணம். எங்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயலுங்கள்.
மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது முழுக் குடும்பத்திற்கும் அரச நிதியை செலவு செய்தார். நாயை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்தி உள்ளார்.
மஹிந்தவின் மகன் யோசித ராஜபக்ச. யப்பான் செல்ல வெளிவிவகார அமைசரின் மூலம் 20 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அவரது மகன் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று 21 மாதம் அங்கு இருந்தார். அதற்காக வெளிவிவகார அமைச்சின் பணம் செலவிடப்பட்டு உள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஐ.நாவில் உரையாற்றுகின்ற போது அதனை தொகுத்து வழங்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார்.
இவ்வாறு தான் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட து. ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. முன்னுதாரணமாக நடந்து காட்டுகின்றனறோம்.
ஜனாதிபதி நிதியம் 1978 இல் இருந்து ஜனாதிபதி செயலகத்தை மையமாக கொண்டு இயங்கியது. இதனை தற்போது நாடு முழுவதும் வியாபித்து உள்ளோம். 341 பிரதேச செயலக க்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அந்த பயனை பெற மக்களுக்கு போதுமான வசதி இதுவரை இருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு 4535 விண்ணப்பங்கள் கிடைத்தது. 2024 ஆம் ஆண்டு காலத்தில் இதே காலப்பகுதியில் 2902 ஆக இருக்கிறது. ஜனாதிபதி நிதியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் அதிகரித்துள்ளது.
நாங்கள் இன, மத பேதமற்ற வகையில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியதை எமது ஆட்சியில் அடைந்தே தீருவோம் எனக் குறிப்பிட்டார்.








