மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் 02டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இன்றிலிருந்து தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வாக இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாஸின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மு.உதயகுமார் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு கட்டுப்பாட்டு அணியினர்,பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.
மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் கடந்தவாரம் வீடுகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்அடுத்தகட்டமாக சுற்றுசூழலில் டெங்கு நுளம்பின்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு பொலிஸார்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் இணைந்து வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சீரற்ற வானநிலை நிலவும் காலப்பகுதி என்ற காரணத்தினால் சூழலை தூய்மைப்படுத்தி நுளம்பு தாக்கத்தினை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி உதயகுமார், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்புரையின் கீழ் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது பிரதேசம் அதிகளவான டெங்கு தாக்கம் உள்ள பிரதேசம் என்பதனால் மழைக்கு பின்னர் அதிகமான இடங்கள் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான நிலையினைக்கொண்டிருப்பதன் காரணத்தினால் அது தொடர்பான விழிப்புணர்வுகள் கடந்தவாரம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் களவிஜயங்களை மேற்கொண்டு டெங்கு தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொண்டு அவ்வாறான இடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் எமது அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாத அல்லது கவனத்தில்கொள்ளாத நபர்கள், காணிகளை டெங்கு பரவக்கூடிய இடங்களாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வதிவிடங்களில் நுளம்பு குடம்பிகள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக தூய்மைப்படுத்தி எமது செயற்பாடுகள் வெற்றியடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.டெங்கின் தாக்கம் அதிகரிக்காதவகையில் மக்களின் பூரண ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாகவே டெங்கு நோயாளர்கள் ஒவ்வொரு மாதமும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்தவாரம் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த மழைக்கு பின்னர் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதன்காரணமாகவே இந்த நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றோம்.








