இன்றைய இலங்கையின், தேசிய அரசியலின் மையக் கேள்வி இதுவே.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற முழக்கம் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் அநுரவுக்கு சஜித் சாவாலாக இருப்பாரா? என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
அனுர குமார திசாநாயக்கா கட்டமைக்கும் “புதிய அரசியல் கலாசாரம்” என்ற பிம்பத்தை, சஜித் பிரேமதாஸா போன்ற பாரம்பரிய அரசியல் தலைவர்கள் எதிர்கொள்ள முடியுமா? அல்லது அதனை நெருங்க முடியாத, ஒரு அரசியல் தூரத்தில் அவர்கள் நிற்கிறார்களா?
உண்மையைச் சொன்னால், அனுரவின் “புதிய அரசியல் கலாசாரம்” என்ற அரசியல் பிம்பத்தை சஜித் பிரேமதாஸாவால் நேரடியாக எதிர்கொள்ளவும் முடியவில்லை, அதனை இன்னும் சமநிலைப்படுத்தவும் முடியவில்லை என்பதே தற்போதைய அரசியல் யதார்த்தம்.
அனுரவின் “புதிய அரசியல் கலாசாரம்” என்பதன் அர்த்தம் என்ன?

அனுர முன்வைக்கும் அரசியல், ஒரு கொள்கைச் சட்டகமாக மட்டும் அல்லாமல் அது ஒரு மனநிலையாக, ஒரு அரசியல் வேகமாக, ஒரு காலத்தின் கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.
அந்த பிம்பத்தின் முக்கிய அம்சங்கள்;
- ஊழலற்ற, எளிமையான அரசியல் அடையாளம்.
- பாரம்பரிய எலீட் அரசியலுக்கு (Elite Politics) நேரடியான எதிர்ப்பு.
- “நாம் – அவர்கள்” என்ற தெளிவான அரசியல் கோடு.
- இளையோரை மையமாக்கிய, கோபமும் நம்பிக்கையும் கலந்த அரசியல் மொழி.
இவை அனைத்தும் சேர்ந்து, அனுரவை “அமைப்பைச் சீரமைப்பவர்” அல்ல “பழைய அமைப்பை தகர்ப்பவர்” என்ற பிம்பத்தில் நிறுத்துகின்றன.
இது ஒரு அரசியல் நிர்வாக வடிவம் அல்ல, ஒரு நெறி சார்ந்த பண்புச் (moral) சவால்.
சஜித்தின் அரசியல் பிம்பம் வரம்புகளை கொண்டது.

குறிப்பாக, சஜித் பிரேமதாஸாவின் அரசியல் பிம்பம் சில முக்கியமான வரம்புகளுக்குள் சிக்கியுள்ளது.
- நலத்திட்டங்கள், வீடமைப்பு, சமூக பாதுகாப்பு போன்ற கொள்கை அம்சங்களில் அவர் கவனம் செலுத்துகிறார்.
- ஆனால் அந்த அரசியல் மொழி இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியச் சாயலிலிருந்து முழுமையாக விடுபடவில்லை
- “பழைய அரசியல்” என குற்றம் சாட்டப்படும் அமைப்புகளோடு, கூட்டுகளோடு இணைந்தவராகவே பெரும்பாலும் அவர் அடையாளப்படுகிறார்
இதன் விளைவாக, அனுர “பழைமையை தகர்ப்பவர்” என்ற மையத்தை தக்கவைத்துள்ளார் என்றால், சஜித் “பழைமையைச் சீரமைப்பவர்” என்பதற்குள் அடையாளப்பட்டுள்ளார். இன்றைய அரசியல் சூழலில், இந்த வேறுபாடு தீர்மானிக்கும் விடயமாக மாறியுள்ளது.
உடல் மொழியும் அரசியல் வீச்சும்
அரசியல் என்பது சொல்லப்படும் வார்த்தைகளால் மட்டுமல்ல சொல்லப்படும் விதத்தாலும் உருவாகிறது.
- அனுரவின் உடல் மொழி, அரசியல் வீச்சு கடினமானது, நேரடியானது, எதிர்ப்புச் சாயல் கொண்டது
- சஜித்தின் மொழி கருணை, நலன், மனிதாபிமானம் ஆகியவற்றை முன்னிறுத்தும் மிருதுவான மொழியாக உள்ளது.
ஆனால் இன்றைய நெருக்கடியான சமூக-பொருளாதார சூழலில், “கருணை”யை விட “தகர்ப்பை – உடைப்பை – முறிப்பை” (rupture) விரும்பும் மனநிலையிலேயே மக்கள் உள்ளனர். அந்த வெற்றிடத்தை அனுர நிரப்புகிறார்.
அனுரவின் அரசியல் வலிமை அவரது கொள்கைகளில் மட்டுமல்லாமல், அவர் பிடித்திருக்கும் அரசியல் நெறி சார் பண்பு உயரத்தையும் எட்டியுள்ளது.
- “நான் முற்றிலும் வேறொரு அரசியல்” என்ற வாதம்
- ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், குடும்ப அரசியல் போன்ற குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை முற்றிலும் பிரித்துக் காட்டும் முயற்சி
இந்த இடத்தில்தான் சஜித் திணறுகிறார். இந்த நெறி சார் பண்பு உயரத்தை அவர் நேரடியாகத் தொடவும் முடியவில்லை, அதனைப் நெருங்கவும் முடியவில்லை.
முடிவாகச் சொல்ல வேண்டுமெனில், அனுரவின் ‘புதிய அரசியல் கலாசாரம்’ என்ற பிம்பத்தை சஜித் பிரேமதாஸா எதிர்கொள்ளவோ, அதற்கு நெருங்கவோ முடியாதவராகவே தற்போது இருக்கிறார்.
அதனை ஈடாட்டுவதிலோ, மாற்றுப் பிம்பமாக கட்டமைப்பதிலோ இன்னும் அவர் வெற்றியடையவில்லை என்பதே எனது தனிப்பட்ட பார்வை.
அவர் உண்மையில் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்றால்;
- கட்சி அமைப்பில்
- அரசியல் மொழியில்
- அதிகாரம் – ஊழல் குறித்த அணுகுமுறையில்
ஒரு அடிப்படைத் துண்டிப்பை (break) மாற்றத்தை (Change) வெளிப்படையாகவும் நம்பகமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.
அது நடந்ததா என்று கேட்டால், இல்லை இன்னும் இல்லை என்றே கூறலாம். காரணம், அவர் மரபு வழிவந்த பாரம்பரிய அரசியல் கூட்டுகளின் கைதியாகவே தொடர்கிறார்.
அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையடையும் வரை, மாற்றத்தை விரும்பும் தலைமுறை – அனுரவுக்கு மாற்றான தலைவராக சஜித்தை ஏற்கப் போவதில்லை.
அதுவே இன்றைய அரசியல் உண்மை.
குறிப்பு…….
இது தமிழ் தேசிய அரசியலுக்கு அப்பால் நின்று பார்க்கப்பட்டது!








