தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்வரும் காலத்தில் உருவாகவுள்ள உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப் படிவங்கள் இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைத்தல்’ என்ற விரைவு இணைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வடிவத்தின்படி தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜூலை 31ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் அரசியலமைப்பு சபைக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர், அரசியலமைப்பு சபை அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்ப முடியும்.
மேலும், கடித உறையின் இடதுபுற மேல் மூலையிலும், மின்னஞ்சலின் Subject பகுதியிலும் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைத்தல்’ என தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.








