சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிரதி அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (19) இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டுடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய இராஜதந்திர மற்றும் சுகாதார ஒத்துழைப்பு, அத்துடன் வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாட்டினை மேலும் மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அனுப்ரியா படேல், இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலின் முதன்மையாக இலங்கை உள்ளதாக தெரிவித்தார்.
டித்வா சூறாவளிக்குப் பிறகு நாட்டினை வலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது என்றும், எதிர்காலத்தில் உதவி தொடரும் என்றும் படேல் தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை உறவுகள் வலுவானவை என்றும், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலையின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார், மேலும் பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டத்திற்குத் தேவையான ஆதரவையும், நாட்டில் சுகாதார சேவையின் எதிர்காலப் பணிகளை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆதரவையும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய மாநாடு (17) அன்று தொடங்கி இன்று (19) நிறைவடைகிறது.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, பாரம்பரிய மருத்துவத்தில் சான்றுகள், ஒருங்கிணைப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசஅமைச்சர்கள், விஞ்ஞானிகள், பழங்குடித்தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.








