திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி பிற்பகல் சுமார் 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இது தொடர்பில் சம்பவ நேரத்தில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் அறிந்ததையடுத்து, இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட கருத்தில், குறித்த இளைஞர் போதைப்பொருள் பாவனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்ற தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்யச் சென்றபோது கைகலப்பு ஏற்பட்டதாகவும், அந்தச் சூழ்நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணமானவரும், முச்சக்கர வண்டி ஓட்டுனராக தொழில் செய்து வருபவருமான குறித்த இளைஞர், காவல்துறையினர் கூறுவது போல எவ்விதமான போதைப்பொருள் பாவனையிலும் அல்லது கெட்ட பழக்கங்களிலும் ஈடுபட்டவர் அல்ல என அவரது நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனால், சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
எந்த சட்ட அடிப்படையில் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது? நீதிமன்ற அனுமதி இன்றி துப்பாக்கியுடன் ஏன் சென்றனர்? உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது எப்படி? போன்ற கேள்விகள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ளன.
இதுகுறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் பல சந்தேகங்கள் இருப்பதாகக் கூறியதுடன், நாளை (22ஆம் திகதி) மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.








