ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ‘REBUILDING SRI LANKA’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க கதிர்காம பஸ்நாயக்க நிலமே தீர்மானித்துள்ளார்.
இந்த ஏலமானது இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த தங்கத்தை அரசாங்கத்திற்கு வெளிப்படையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க,
“நாங்கள் இது தொடர்பாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திடம் ஆலோசனைகளைக் கோரியுள்ளோம். 2000 ஆண்டுகள் பழமையான தங்கத்தை நாங்கள் பயன்படுத்தப் போவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை. சமீபத்திய காலப்பகுதியில் பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கத்தையே மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்திற்கு வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.








