நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் அதிக விழிப்புடன் செயல்படுமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
பொது இடங்களில் விலை உயர்ந்த நகைகள், கடிகாரங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
மதிப்புமிக்க கைபேசிகளை வெளிப்படையாக பயன்படுத்த வேண்டாம்.
அறிமுகமில்லாத நபர்களை வாகனத்தில் ஏற்ற வேண்டாம்.
தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம்.
ATM மற்றும் கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தனிமையான வீதிகள் மற்றும் குறுக்குவழிகளை தவிர்த்து பிரதான சாலைகளை பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் சீக்கிரமாக வீட்டிற்கு திரும்புமாறு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.
வீட்டில் கதவு மணி அடிக்கும்போது பாதுகாப்பான முறையில் சரிபார்க்க வேண்டும்.
வாகனத்தில் ஏறியவுடன் உடனடியாக கதவுகளை பூட்ட வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்கள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும்.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்தி பணம் கேட்பது போன்ற சம்பவங்கள் காணப்பட்டால், அதனை உடனடியாக பொலீசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமை மேம்படும் வரை அடுத்த சில மாதங்களுக்கு இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொலீஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.








