சிறப்புத் தேவைகள் கொண்ட கல்வி நிறுவனத்தில் பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இஸ்ரேலில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மே 2025 இல் வேலைக்காக இஸ்ரேலுக்கு வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், தனது உத்தியோகபூர்வ வேலைத் துறைக்கு வெளியே தற்காலிக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) காவல் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடரும் நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்டர்போலின் இஸ்ரேலிய கிளையிடமிருந்து தூதரகத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புத் தேவைகள் கொண்ட மைனர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த வழக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் இதனை விசாரித்து வருவதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஒரு அறிக்கையில், குற்றவியல் மற்றும் சமூக நடத்தை குறித்த இஸ்ரேலின் கடுமையான சட்டங்களை மீண்டும் வலியுறுத்திய தூதரகம், கடுமையான குற்றங்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் சமூக நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








