பிரித்தானியர்கள் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டை சிங்கள தேசியவாத ஆட்சியாளர்களிடம் கையளித்ததிலிருந்து, தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள கரிநாள் போராட்டத்திற்கு மக்கள், மாணவர்கள், காணாமல் போன உறவுகள் மற்றும் பொது அமைப்புகள் அனைவரும் வலுச்சேர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பே இன அடக்குமுறைகளுக்கும் நாட்டின் பின்னடைவை ஏற்படுத்தும் அடிப்படை காரணம் எனக் குறிப்பிட்ட அவர், சமஷ்டி அரசியல் கட்டமைப்புடன் அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வடக்கில் கிளிநொச்சி, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் கரிநாள் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், வர்த்தக மற்றும் பொது அமைப்புகள் முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.








