சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கு பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலையில் கறுப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலையை வழங்கவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், இந்த கரிநாள் அனுஷ்டானம் மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். கடந்த கால இன அழுத்தங்கள், அரசியல் புறக்கணிப்புகள் மற்றும் நீடித்த அநீதிகளுக்கு எதிராக கவனம் ஈர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஒன்றிணைந்து அமைதியான பேரணிகள், கறுப்புக் கொடி ஏற்றுதல் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பல இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








