திஹாரியில் நடைபெற்ற மத்ரசா பட்டமளிப்பு நிகழ்வுக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி, “மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனால் ஒருகாலத்தில் அவருக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால் பின்னர் அவரது தரப்பு ஞானசார தேரர், ரத்தன தேரர் உள்ளிட்டோரின் முஸ்லிம் விரோத போக்குகளுக்கு இடமளித்ததால் எங்களுக்கும் முரண்பாடுகள் உருவானது” என குறிப்பிட்டுள்ளார்.
2005 முதல் 2012 வரை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி ஒப்பீட்டளவில் நல்லதாக இருந்ததாக கூறிய அவர், 2012க்கு பின்னர் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டதாகவும், அதன்பின் மைத்திரிபால சிறிசேன–ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் திகன, கண்டி, மினுவாங்கொடை, காலி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் சமூகத்துக்கு தாக்குதல்கள் நடந்ததுடன் ஈஸ்டர் தாக்குதலும் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
2019ல் மீண்டும் ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டபோதும், அதனால் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான “மோசமான ஆட்சி” உருவானதாகவும், இறுதியில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை நிர்வாகத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதே அந்தக் கட்சியின் இனவாதப் போக்குக்கான சான்று எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு ஓரளவு முன்னேற்றத்தை நோக்கி செல்கின்ற வேளையில், “இனவாத அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் நாமல் ராஜபக்ஷவை, அதுவும் அ.ஜ. உலமா ஆயுட்கால தலைவர் ரிஸ்வி முப்தியுடன் இணைத்து, மத்ரசா பட்டமளிப்புக்கு அழைத்தது முட்டாள்தனமான செயல்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்காக சம்பந்தப்பட்ட மத்ரசாவும், அ.இ. ஜம்மியதுல் உலமா சபை தலைவரும் சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என இலங்கை உலமா கட்சி வலியுறுத்தியுள்ளது.








