மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர் ஜெ.பி. ஜனார்த் ஆருஷ்கர், 15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கை அமைப்பின் ஒழுங்கமைப்பில், புனித ஜோசப் கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து 13 வயதுக்குட்பட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அக்கடமி (SCKA) சார்பில் கலந்து கொண்ட ஆருஷ்கர், குமிட்டே (Kumite) பிரிவில் 21 போட்டியாளர்கள் மத்தியில் 5 சுற்றுகளை வெற்றி கடந்த அவர், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
மேலும், காடா (Kata) பிரிவில் 22 பேர் போட்டியிட்ட நிலையில் சிறந்த 8 வீரர்களில் ஒருவராக தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
புனித மிக்கேல் கல்லூரி மாணவரான அவர், தொடர்ச்சியான பயிற்சிகளை SCKA அகாடமியில் மேற்கொண்டு வருகிறார். பிரதான பயிற்றுவிப்பாளர்களான எச்.ஆர். சில்வா, ஆர். கௌசி மற்றும் துஷ்யந்தன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்டத்தில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள அவர், எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

















