இலங்கையில் வீதிப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) ட்ரோன் கமெராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, இலங்கையின் வீதிப் போக்குவரத்துத் துறையில் நிலச்சரிவுகளை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் “SLIDER” (Strengthening The Capacity of Landslides for Resilient Road Transportation in Sri Lanka) திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
JICA முகமையின் பிரதிநிதி நோரு மத்சுனோஷிட்டாவினால் (Noru Matsunoshita), வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் பாஸ்கரனிடம் இந்த ட்ரோன் கமெராக்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
இந்த ட்ரோன் கமெராக்கள் மூலம் வீதிகளில் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் நேரடியாகச் செல்ல முடியாத இடங்களைப் பற்றிய துல்லியமான மற்றும் தெளிவான காட்சிகளை இலகுவாகப் பெற முடியும்.
இதன் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளைப் பயன்படுத்தி வீதித் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு (Planning & Design) பணிகளை மிகவும் வேகமாகவும் இலகுவாகவும் முன்னெடுக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பாஸ்கரன் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான விசேட தொழிநுட்பப் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு JICA நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் JICA முகமை சார்பில் எரிக்கோ சதோ (Eriko Sato), தொமோயுகி வடா (Tomoyuki Wada), ரியோட்டா கிமுரா (Ryota Kimura), எஸ்.கே.பி. கிறிஸ்டின் (S.K.P. Christeen) ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் எச்.எச். ஹெட்டியாராச்சி, மேலதிக பணிப்பாளர்கள் நாயகம் தர்ஷிகா ஜயசேகர, ஏ.பி.கே. அபேதீர, வசந்த குமார் (பதவி வழி), பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரணசோம உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.








