மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த “பாடுமீன்களின் சமர் – 2026” கிரிக்கெட் போட்டி கோட்டைமுனை விளையாட்டு கிராம புல்வெளி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைத் தமதாக்கியது.
இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக “பாடுமீன்களின் சமர்” வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
அணியின் துடுப்பாட்டத்தில் எஸ். அகரன் சிறப்பாக விளையாடி 61 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் கடந்ததுடன், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றினார்.
191 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித மைக்கேல் கல்லூரி அணி, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பை எதிர்கொள்ள முடியாமல் 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து சுழற்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியது.
போட்டியை காண இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவான விளையாட்டு ரசிகர்கள் கலந்துகொண்டு தமது அணிகளுக்கு உற்சாகம் அளித்தனர்.
மட்டக்களப்பின் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்த பாரம்பரிய கிரிக்கெட் போட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

















