முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இலக்கம் 35 ஆக இயற்றப்பட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானி சட்டத்தை (Chief of Defence Staff Act) ரத்து செய்வதற்கான அரசின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை இரத்து செய்ய தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆரம்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, சட்ட வரைவு தயாரிப்பாளர் மூன்று மொழிகளிலும் தயாரித்த “பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை இரத்து செய்வது குறித்த சட்டமூலம்” தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியை பெற்றுள்ளது.
இந்த யோசனையை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார் என்பதுடன் அதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டமூலம் விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. பின்னர், இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.








