கம்பஹா – கலகெடிஹேன பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அரிய வகை கடல் நத்தையோடுகளுடன் 45 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கலகெடிஹேன பகுதியில் பழங்காலப் பொருட்கள் சேகரித்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வனவிலங்குச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பல்வேறு விலங்குப் பாகங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, 5 மரை மான்களின் கொம்புகள், 8 புள்ளி மான்களின் கொம்புகள், தனித்தனியான 2 மான்கொம்புகள், பாதுகாக்கப்பட்ட இலங்கை இராட்சத நில நத்தைகளின் 5 ஓடுகள், 2 சிலந்திச் சங்குகள் மற்றும் அடையாளம் காணப்படாத மேலும் 23 அரிய வகைச் சங்குகள் அடங்குகின்றன.
கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணைகளுக்காக ஹொரகொல்ல வனவிலங்கு அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 10 இலட்சம் ரூபா பெறுமதியான தனிநபர் பிணையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வனவிலங்குப் பாகங்களும் எதிர்வரும் 10ஆம் திகதி கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








