மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70000ரூபா தண்டப்பனமும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழிகாட்டலில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா இணைந்து உணவக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றி, வண்டுகளுடன் உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பதற்கு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு எதிராக நேற்று (06) ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் தவேந்திரராஜா பொதுச் சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளரிற்கு 70,000ரூப தண்டப்பணமும் திருத்த வேலைகளைச் செய்து முடியும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும் கைப்பற்றப்பட்ட பெருமளவான வண்டுகளுடன்கூடிய கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை என்பனவற்றை அழிக்கவும் நீதிவானினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.



















