மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த உதவித் தொகையை 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்தும் இந்த வேலைத்திட்டம், பயனாளிகளே வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறையின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது சொந்த வீடுகளைக் கட்டி வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பெரும் உதவியாக அமையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.








