மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் வழமை போல பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த போது, திடீரென உட்புறமாக புகை கிளம்பியுள்ளது. நொடிப் பொழுதில் தீ பஸ் முழுவதும் பரவியுள்ளது.

பஸ்ஸினுள் புகை மூட்டம் ஏற்பட்டதும் பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற முயன்றுள்ளனர். எனினும், தீ மளமளவென பரவியதால் பலர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சுவிஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.









