யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு வேலணைப் பகுதியை ஒரு சுற்றுலா வலயமாக மாற்றும் நோக்கில், மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் செலவில் “எக்கோ ரூரிசம்” (Eco-Tourism) திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், முறையான திட்டமிடல் இல்லாமை மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இத்திட்டம் தோல்வியடைந்தது.
இத்திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள், எவ்வித பயன்பாட்டிற்கும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அழிவடைந்துள்ளன.
திட்டத்தின் பெயரில் பெறப்பட்ட பெருந்தொகை நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த ஊழல் மற்றும் நிதி வீண்விரயத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் குறிப்பிட்டு நா. வேதநாயகன்; அன்றைய யாழ். மாவட்டச் செயலர் (தற்போதைய வடமாகாண ஆளுநர்).
தெ. சுகுணரதி: திட்ட காலப்பகுதியில் பணியாற்றிய முன்னாள் வேலணை பிரதேச செயலர்.
ஆ. சோதிநாதன்: திட்ட காலப்பகுதியில் பணியாற்றிய முன்னாள் வேலணை பிரதேச செயலர். ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது:
அரச நிர்வாக அதிகாரிகளாக இருந்தபோது, மக்களின் வரிப்பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








