ஈரான் ஆண்கள் கால்பந்து அணி அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் அணி உலகக் கோப்பை போட்டிகளுக்கு வரவேற்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேசமயம் “நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி. உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.
சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” என ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான் தெரிவித்தார்.








