மிஹிந்தலை புனித பூமியில் ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்தார் எனக் கூறப்படும் தொல்பொருள் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் இன்று (16) வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்குச் சென்றிருந்தார்.
இதன்போது, சந்தேகநபர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளமை ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில், மிஹிந்தலையை வழிபட வந்த குழுவினருக்கு குறித்த இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் உடனடியாக காட்டை நோக்கி ஓடிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர் தனது டி-ஷர்ட்டைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த வேளையில், தாம் தலையிட்டு அவரை மீட்டதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலஹெங்குணவெவே தம்மரதன தேரர், மிஹிந்தலை புனித பூமியில் போதிய பொலிஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.







