லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனிப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக மோசடி விசாரணைப் பிரிவில் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் தான் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டிற்குப் பரிசு விழுந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக, விற்பனை நிலையத்திலிருந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபரான பெண், குறித்த சீட்டிற்கு எந்தப் பரிசும் விழவில்லை என அவரிடம் கூறி சீட்டைத் திருப்பி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனினும் அந்த லொத்தர் சீட்டிற்கு 5 கோடி 69 இலட்சம் ரூபா பரிசு கிடைத்துள்ளமை தெரியவந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் தனக்கு நீதி கோரி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








