தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, QR குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நாட்டின் எரிபொருள் நுகர்வை 20% ஆல் குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன்களாகவும், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன்களாகவும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் வரிசைகளை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே அவசரமாக QR முறைமை கொண்டுவரப்பட்டதாகக் கூறிய அவர், உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு அடுத்த மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
“எமது களஞ்சியத்தில் இருந்த எரிபொருள் மற்றும் மார்ச் மாதம் கிடைக்கப்பெறவுள்ள, போரினால் பாதிப்பு ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்தத் திகதிகளைக் குறிப்பிட்டோம். மசகு எண்ணெய் (Crude oil) கிடைப்பதில் இன்னமும் சிக்கல் உள்ளது. அடுத்த மாதத்தின் இறுதி வாரம் வரை எம்மால் பயணிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். அதற்கு அப்பால் செல்வதென்றால், தற்போது கப்பல்களை நாம் முழுமைப்படுத்த வேண்டும். இன்றைய தினம் தீர்மானமிக்க ஒரு நாளாகும். இந்தப் போர் நெருக்கடி உருவானவுடன் நாம் மசகு எண்ணெய் தொடர்பான தீர்மானங்களை மாற்றினோம். எனவே, இந்தப் போர் எந்தளவிற்குச் செல்லும் என்று தெரியாத நிலையில், முழு உலகமும் இதற்குத் தயாராகி வருகின்றது. இதனால், இப்போது நாம் சில அர்ப்பணிப்புகளைச் செய்து இருப்புகளைப் பாதுகாத்தால் மட்டுமே இந்த அபாயத்திலிருந்து வெளியேற முடியும்” என அவர் தெரிவித்தார்.








