குருநாகல் – குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அதிவேகமாக வந்த அம்புலன்ஸ் வாகனம், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் லபுயாய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது
விபத்தின் வீரியத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த ஐவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாவனல்ல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயது நபர் ஒருவர் என்பதுடன் அவர் பாதணிகள் விற்பனை செய்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நால்வரும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்துக்குள்ளான அம்புலன்ஸ் வண்டியானது குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு சொந்தமானதாகும்.
நோயாளியை மருத்துவ குழுவினருடன் குருநாகல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்பின் அம்புலன்ஸ் வண்டியில் இருந்த நோயாளி வேறு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







