நியூயார்க் நகர சபையில் LGBTQIA+ சமூகத்தவர்களுக்கான ( மூன்றாம் பாலினத்தவர்) விவகாரங்களுக்குரிய அலுவலகமொன்றை முதன்முதலாக மேயர் ஸொஹரான் மம்தானி உருவாக்கியுள்ளார்.
இதன் பணிப்பாளராக டெய்லர் பிரவுன் எனும் திருநங்கையொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினத்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று – ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் கூறியிருந்த நிலையில், இவ்வாறு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒரு அலுவலகத்தை – மேயர் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
வீடற்ற தன்மை, வேலை பாதுகாப்பின்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் அதிக விகிதத்தில் பாதிக்கப்படும் நிலையிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவும் வகையில், இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அலுவலகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை டெய்லர் பிரவுன் – தற்போது மாநில சட்டமா அதிபர் அலுவலகத்தின் சிவில் உரிமைகள் பணியகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நியூயார்க் நகர அலுவலகத்தில் – மிக உயர்ந்த பதவியில் அமர்த்தப்படும் திருநங்கை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க செனகல் நாட்டில் தன்பாலினத்தவர்களை திருமணம் செய்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் சட்ட மூலம் – அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ஐந்து வருட சிறை தண்டனையை 10 வருடங்களாக செனகல் நாடாளுமன்றம் அதிகரித்தது.
மேலும் அவர்களுக்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
செனகல் நாட்டில் 90 வீதமானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு ஒன்றுடன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்துப் போவதாகவும், ஆனால் அதே நிலைப்பாட்டுக்கு மாற்றமாக நியூயார்க் நகர முஸ்லிம் மேயர் ஸொஹரான் மம்தானி நடந்து கொள்வதாகவும் உலகளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.








