மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றிய உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் சிறிநேசன் ஆகியோர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று 16.03.2026 இடம்பெற்றது.
மட்டக்களப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் அரசியல் பணிமனையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இச் சந்திப்பின் போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் முறையாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை, ஒன்றியத்தின் பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தர அலுவலகம் ஒன்று அவசியம், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகளில் தங்களை அடையாளப்படுத்துவதற்கும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையின் அவசியம், அரசாங்க ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் தற்போதுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்களை பாராளுமன்ற உறுப்பினரிடம் ஒன்றிய பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்துத் தெரிவித்த ஒன்றியப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து இவ்வாறானதொரு சந்திப்பு நடத்தப்பட்டதில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினரின் வினைத்திறனான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டே தாம் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டனர்.
மேற்படி விடயங்களை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் எதிர்காலங்களில் பிரதேச செயலக மட்டங்களில் கூட்டங்களை நடாத்தி உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்று தருவதோடு மேலதிக ஏனைய விடயங்களை இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாராளுமன்ற அமர்வுகளிலும் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் இதன்போது வைத்தியர் இ.சிறிநாத் உறுதியளித்தார்.









