மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவரும், பெண்னொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.



நேற்று முன்தினம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் கிணற்றினுள் பெண் ஒருவர் குத்துயிராகவும், இன்னுமொரு பெண்ணின் சடலம் சிதைவுற்ற நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கிணற்றினுள் மேலும் ஏதேனும் சடலங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னத்துடன் குறித்த கிணறு சோதனைக்காக நீர்இறைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை சோதனையின் போது குறித்த கிணற்றினுள் இருந்து வேறு எவ்வித சடலங்களோ மீட்கப்படவில்லை எனப் பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய மூன்று பொலிஸ் நிலையங்களும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசேட பொலிஸ் குழுக்களினூடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
கொத்தியாபுலையில் நேற்று முன்தினம் காணாமல் போன பெண், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குத்துயிராக மீட்கப்பட்டதுடன், இன்னுமொரு பெண்ணில் சடலமும் முற்றாகச் சிதைவுற்ற நிலையில் மீட்கப்பட்ட விடயம் மாவட்டத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் பொலிசாரினால் மேற்படி விடயம் தொடர்பில் பல குழுக்கள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மீட்கப்பட்ட சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ஆம் கிராமம், வம்மியடியுற்றினை சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி என்பவருடையதாக இருக்கலாம் என உறவினர்களினால் அவரது பாதணிகளை வைத்து அடையாளம் காணப்பட்டபோதிலும் பிரேத பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் சீசீரிவி கமராக்கள் மூலம் மீட்கப்பட்ட பெண் செல்லும் காட்சியும் அவருக்கு பின்னால் செல்லும் பெண் ஒருவரின் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளதுடன் குறித்தபெண்ணே இந்த கடத்தல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுவருகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.








