சர்வதேச காவல்துறையினரால் (Interpol) தேடப்பட்டு வந்த இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளியான பிரபாத் மதுசங்க எனப்படும் ‘மிதிகம சூட்டி’, இன்று (30) அதிகாலை ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஓமானில் தங்கியிருந்தபோது சர்வதேச காவல்துறையினரால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் அந்த நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குப் பயணித்திருந்தனர்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவரை, அங்கு காத்திருந்த விசேட அதிகாரிகள் குழுவினர் பொறுப்பேற்றனர்.
இலங்கையின் தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல திட்டமிட்ட கொலைச் சம்பவங்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள இவரிடம், அவர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏனைய கும்பல்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தென்னிலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இவரை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளமையானது, குற்றக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.








