மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில், நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டு மிகவும் சூட்சுமமான முறையில் நீண்டகாலமாக இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (29) மாலை பொலிஸார் அதிரடியாகச் சுற்றிவளைத்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட இந்தச் சோதனையின் போது, எட்டு பரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
இந்த முற்றுகை நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் உபகரணங்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











